Wednesday, December 21, 2016

தமிழ் ஹைக்கூ கவிதைகள்





மனசெல்லாம் நூல் வெளியீடு

20.11.2016 அன்று சேலம் ரோட்டரி அரங்கில் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எனது மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் திருவாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களால் வெளியிடப்பட்டது. அருகில் வாசகன் பதிப்பக உரிமையாளர் திரு.ஏகலைவன் அவர்கள்.

Sunday, September 11, 2016

முரண்களின் வாழ்வு !





முரண்களின் வாழ்வு !
**********************************
* தன் பெயரை விரும்பாத
வழக்கறிஞர் 
அரிச்சந்திரன்
* இவர் பெயருக்குத்தான்
மருத்துவர் ...
வைத்தியநாதன்
* கசாப்பு கடை
உரிமையாளர்...
காந்தி !
* முதியோர் பென்ஷன்
கைநாட்டு போட்டாள்
சரஸ்வதி !
* குளம் காணவில்லை
ஊரின் பெயர் மட்டும் ....
தாமரைக்குளம் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்

Friday, June 10, 2016

நம்பிக்கை வாசல்

@ கடல்வெளி மணல்மேட்டில் 
புதைந்துகிடக்கிறது 
காதலின் ரகசியங்கள் 
 
@ வளையல் துண்டுகள் 
புழுவானது எப்போது ?
கொத்தும் கோழிகள் 
 
@ நினைக்கும் மனமின்றி 
காதலியின் போக்கு...
மறதியை மறந்ததால்  
 
@ அன்பொடு அகத்தூய்மை 
அழைத்துச் செல்லும் 
அறிவுச் சுரங்கத்தினுள் 
 
@ பலவீனமான சிந்தனை 
தகர்த்துவிடுகிறது 
வெற்றியின் படிகளை 
 
@ ஒப்பிடும் தன்மையால் 
உருக்குலைந்து போகிறது 
நம்பிக்கை வாசல்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
 

Sunday, May 29, 2016

ஞான மரபில் ....

ஆயிரக் கணக்கில் 
அவல காட்சிகள் ...
மூடிய இமைக்குள் !


இதயம் கனத்து 
இடம்பெயர்ந்தது ...
பிரிவின் வலி ...!


தோளில் அமர 
துடித்தன சுமைகள்... 
இலகுவாய் !


நெற்றியில் உதிரும் 
வியர்வைத் துளியில்... 
உழைப்பின் வாடை !


வெற்றியின் படிகளை 
அடையாளம் கண்டன ...
தோல்வியின் கால்கள் !


மனித மனத்தின்
பெரும் பயணம்
ஞானமரபுகளைத் தேடி

நுண் அணுக்களின்
கூட்டுப் பொருட்கள்
பிரபஞ்சம்

ஆன்மீகத் தேடலில்
மூன்று வழித்தடங்கள்
பக்தி ஞானம் தியானம்

செயல்களின் வடிவம்
பிறப்பெடுக்கிறது...
நாம் யார் எனும் சிந்தனைகளில் !


குற்றமற்ற கலாச்சாரத்தில்
பதுங்கியுள்ளது
அறிவியல் வாழ்க்கை !


நவீன தகவல் தொடர்புகள்
அடையாளம் காட்டுகின்றன...
கலாச்சார சீரழிவுப் பாதைகளை !


இலக்கண இலக்கியங்களின்
பாரம்பரியத்தில் தோன்றியது...
தமிழ்மொழிக் குடும்பம் !


இன்றைய சோர்வை விலக்கும் 
திறனிருந்தால்...
நாளைய மலர்தல் நமக்காகவே !


அடக்கமெனும் அணிகலன்
அணிந்தவர்கள்...
அறத்தின் காவலர்கள் !


நற்செயல் நடப்பதெல்லாம்
நல்லோர்கள் முடிவெடுக்கும்
இறைத்தன்மை !


பயணத் திசைகளின்
வெற்றி இலக்குகள் 
நம்மிடமே !


இழப்பதற்கு ஒன்றுமில்லை
கொண்டுவந்தது
ஏதுமில்லை என்பதால் !


மனவமைதிப் பூங்காவில்
இடையிடையே ...
உறவுப் பாலங்கள் !


சொற்பகாலங்களின் 
வாழ்வுரிமை ...
குழப்பவாதிகளின் குதூகலம் !


மன இறுக்கத்தில் 
மேடைபோட்டு அமர்ந்துவிடுகிறது ...
இறுமாப்பும் கர்வமும் !


தன்னிலை மறந்தோர்கள்
முன்னிலை வகித்தாலும்
தழைக்காது தர்மவாழ்வு !


.....கா.ந.கல்யாணசுந்தரம் 




சிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....




*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !



*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !



*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!



*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!



*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !

*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!



*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !



*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !



*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு



*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !



*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !



*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !



*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !



*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !



........கா.ந.கல்யாணசுந்தரம்
.


பூங்காவில் ஓய்வெடுத்தன....


Friday, January 29, 2016

மகரந்தங்களின் வசந்தகாலம்....







மகரந்தங்களின் 
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !

இசையின் சிகரங்களில் 
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !

விண் காணும் தளிர்கள் 
மண் நோக்கி ....
சருகுகள் !


தியாக ஒளி பரப்பி 
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம்